கேரளா மூணார் நிலச்சரிவு இறப்பு எண்ணிக்கை உயர்கிறது!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் 9 பேர் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது.
 
கேரளாவில் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11-ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
 
பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
 
வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 100 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 100 பேர் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 65-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன.
 
தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
 
இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் ஜேசிபி-யை கொண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் விரைவாக மீட்புப்பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author